
மோட்சம் கொடுக்கும் சக்தி பெண் தெய்வத்துக்கு இல்லை. ஆண் தெய்வம் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடும் பேறு கூட பெண் தெய்வத்துக்கு இல்லை.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 53 .
பகவானின் போஜனப் பட்டியலை பார்த்தீர்களா?... காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் நித்யப்படி (தினந்தோறும்) சாப்பிடும் இஷ்டமான போஜனம் இட்லி நாம் சாப்பிடும் சாதாரண இட்லியல்ல.
குடலை இட்லி, அப்படியென்றால்?...பெருமாள் கோவில்களில் துளசி பறிப்பதற்கென்றே ‘குடலை’ என அழைக்கப்படும் ஒரு நீண்ட கூடை வைத்திருப்பார்கள். நீண்ட உருளை வடிவில் இருக்கும் இந்த கூடை...இதே போன்று ஒரு பாத்திரம் செய்து... அதில் மாவை ஊற்றி வேகவைத்து வெளியே எடுத்தால் அதுதான் குடலை இட்லி.சரி... இவ்வளவு நளபாகங்களை சொல்லியாகிவிட்டது.
இத்தனை நளபாகங்களும் நிர்மால்யம் என்றது ஆஹமம்
அப்படியென்றால்?...பாஞ்சராத்ர ஆகமம் சொன்னது...
“சொரூபாம் பிரதிமாம் விஷ்ணோஹோப்ரஸன்ன வதனே க்ஷணாம் க்ருத்துவாஆத்மன ப்ரீதிகரீம் சொர்ண ரஜதா திபிதாமர்ச்சயேது தாம்ப்ரணமேது தாமே விசிந்தேதுவிஷதீ அபாஸ்த தோஷஸ்துதாமேவ ப்ரம்ம ரூபிணிம்....”
வேத வழிமுறைகளை கர்மாக்களை புத்தர் வேகமாக வீரியமாக அடித்து புரட்டி போட்ட காலத்துக்குப் பிறகு...“உனக்கொரு புதுவழி சொல்கிறேன் கேள்.
விஷ்ணுவை பிரதானமாக்கி உனக்கு பிடித்தமான உருவத்தை சிறிய அளவில் தயார் செய்து கொள். அது கல்லாக இருக்கக்கூடாது. தங்கத்திலேயோ வெள்ளியிலேயோ செய்ததாக இருக்கவேண்டும். அதை நீ தனியே வைத்து பூஜை செய்து கொள்...” என்றது.
இதன் பிறகு தென்னாட்டில் பெரிய பெரிய கோவில்களையும்... சிலைகளையும் பார்த்தவர்கள் ‘இது நன்னா இருக்கே... இதுக்கும் நாங்களே பூஜை பண்றோம்...’ என்று வந்தனர். பிறகுதான் பகவானுக்கும் பசிக்கும் அவனுக்கு நைவேத்யம் செய்யணுமே என்று சொல்லி... இவ்வளவு நளபாகங்களை கண்டுபிடித்தனர்.
சரி... நிர்மால்யம் என்றால் என்ன என்று இன்னும் சொல்லவில்லையே?... பகவானுக்கு இத்தனை விதம் விதமான பட்சணங்கள், பலகாரங்கள் இத்தியாதிகளை நைவேத்யம் பண்ணுகிறீர்களே...
அவன் அதை சாப்பிடுகிறானா?... அவன் முன்னால் வைத்துவிட்டு அதை கொஞ்ச நேரத்திலேயே எடுத்து வந்து விடுகிறீர்களே?... அதற்குள் அவன் அதை ஸ்வீகரித்துக் கொண்டிருப்பானா?...எடுத்துக் கொண்டு போய் என்ன செய்கிறோம்?
பகவானின் பேரைச் சொல்லி நாம் சாப்பிடுகிறோம். இன்றும் கூட பெருமாள் கோவில்களில் உத்ஸவத்தின் போது புளியோதரையில் காரமில்லை, உப்புமாவில் உப்பில்லை என்று பெரிய சண்டையே நடக்கிறது.
இதெல்லாம் எதற்கு?.... பகவான் சாப்பிட்டதை நாம் ஏன் சாப்பிட வேண்டும்?... அது எச்சிலாயிற்றே?... அவன் எச்சில் செய்ததை நான் சாப்பிடுவதாவது... அதை தூக்கிப் போடுங்கள். தூர தூக்கிப்போடுங்கள். அதை உபயோகப்படுத்தாதீர்கள். இதுதான் நிர்மால்யம்.
அதாவது ‘எச்சிலை சாப்பிடாதே’ சாப்பிட்டால் உனக்கு நிர்மால்ய தோஷம். ஆகமம் சொன்னபடி சிலை செய்து, பூஜித்தவர்கள் இந்த விஷயத்தை கேட்டவுடன் ‘அடிமடியில் கைவைக்கிறதே’ என்று நினைத்தார்கள்.
அப்படியென்றால் நாம் எப்படி பிழைப்பது?... யோசித்தனர் அதெல்லாம் முடியாது என்றனர். பகவானின் எச்சில்தானே அதை சாப்பிட்டு விட்டுப் போகிறோம். விடுங்கள் என்று அன்னக்கொடி பிடித்தனர்.
இதைத்தான் வேதாந்த தேசிகன் தனது ‘பாஞ்சராத்ர ரட்சை’யிலே சொல்லியிருக்கிறார். இவ்வளவு பட்சணம் பலகாரம் பண்ணி பகவானுக்கு படைத்துவிட்டு அதை நிர்மால்யம் என்று தூக்கிப் போட்டால் எப்படி?...
அது சரிப்பட்டு வராது.எனவே பெருமாள் கோவில்களில் இந்த நிர்மால்யம் சரிப்பட்டு வராது. பெருமாளுக்கு படைத்தவற்றை சாப்பிடுவதால் நிர்மால்ய தோஷம் வராது.
சிவன் கோயில்களில் வேண்டுமானால் நிர்மால்ய (எச்சில்) தோஷம் இருக்கட்டும். இங்கே வேண்டாம்...” என்கிறார் வேதாந்த தேசிக ஸ்வாமி... அதாவது இதன் உள்ளர்த்தம் என்ன?
பெருமாள் கோவில்களில் தான் வகை வகையாய் நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.
சிவன் கோவில்களில் இப்படி வகை வகையாய் சுவை சுவையான பதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை.
எனவே சிவன் கோவில்களில் வேண்டுமானால் எச்சில் தோஷம் என கருதி அதிகபட்சம் சம்பா சாதம்தான். அதை ஒதுக்கி விடலாம்.
ஆனால் சுவையான ‘சப்பு’ கொட்டி சாப்பிடும் பெருமாள் கோவில் பதார்த்தங்களை எப்படி நிர்மால்யம் என்று தூரப் போட முடியும்?... இப்போது புரிகிறதா?
சரி... எதற்கு இதைச் சொல்ல வந்தேன். நாம் தெய்வங்களிலும் பெண் தெய்வங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி பார்த்து வருகிறோம் அல்லவா?... சாப்பாட்டு விஷயத்தில் கூட அது பின்பற்றப்படுகிறது என்பதை சொல்லத்தான் இவ்வளவு விஷயங்களையும் விளக்கினேன்.
அதாவது பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் நைவேத்யத்தை பிராட்டிக்கு நைவேத்யம் செய்யக்கூடாது. அது ஆண் தெய்வமான பெருமாளுக்கு மட்டும்தான். அவர் சுவைக்க மட்டும்தான்.
பிராட்டிக்கு தனித்தளிகைதான். இன்றும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலுக்கு போய்ப் பாருங்கள்.
பெருமாளுக்கு செய்த தளிகையை தாயாருக்கு அதாவது பெண் தெய்வமான பிராட்டி பக்கம் கூட கொண்டு போக மாட்டார்கள். பொருளாதார வசதியில்லாத பெருமாள் கோவில்களில் மட்டும்தான் தவிர்க்க முடியாமல் பெருமாளுக்கும் தாயாருக்கும் சாப்பாட்டு சமாச்சாரம் சமமாக இருக்கிறது.
பெண் தெய்வத்தை வெளியே விடுவதில்லை. மோட்சம் கொடுக்கும் சக்தி பெண் தெய்வத்துக்கு இல்லை. ஆண் தெய்வம் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடும் பேறு கூட பெண் தெய்வத்துக்கு இல்லை. பார்த்தீர்களா பெண் தெய்வங்கள் படும் பாட்டை?... --அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 52 – 2. பகவானுக்கு குளிரும். அதனால் குளிர்காலத்தில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை
பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான். பகவானுக்கு திருஷ்டி படும். திருஷ்டி கழிப்பதற்காக ‘திருவந்தி காப்பு’
பகுதி 54. தனது ஆண்குறியை தெரியும்படியாக்கி காளியை ஜெயித்த சிவன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?
No comments:
Post a Comment