சூத்திரர்கள் மீது மிளகாய்பொடி தூவிய பிராமிணத்திகள். மாமிகளுக்கு போலீஸ் அடி.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 28
துறவி அழலாமா?... அனைத்தையும் துறந்த சங்கராச்சாரியாரின் கண்களில் வழிந்த கண்ணீர், என் கண்களையும் நனைத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆறுதலும், ஆசியும் சொல்ல வேண்டியவரின் கண்களே கலங்கி நிற்கும்போது நாம் என்ன செய்ய முடியும்...? சில நிமிடங்கள் அந்த ஞானக்கண்கள் உப்புநீரை உற்பத்தி செய்தபடியே இருந்தன.
பின்... அவரது காவி வஸ்திரத்தை எடுத்து துடைத்துக் கொண்டார். ‘கஷ்டமாயிருக்கு...’ என்றபடியே மௌனாமானார். அவர் அழுவதற்குக் காரணமான அந்த சம்பவத்தை அவரிடம் சொன்னதை நினைத்து எனக்கும் கஷ்டமாக இருந்தது.
அது...ஸ்ரீரங்கத்து சம்பவம்ஆலய நுழைவுப் போராட்டங்கள் ஆங்காங்கே அதிர்வேட்டுகள் போல நடந்து கொண்டிருந்தன. கூட்டம் கூட்டமாய் ஆலயவாசல் முன் நின்று...தெய்வத்தை தரிசிக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என போராடிக் கொண்டிருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.
அப்படித்தான், ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சஞ்சரிக்க அனுமதி வேண்டும் என்றும், ரங்கநாதரை தரிசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் கோஷங்கள் காற்றை பயமுறுத்திக் கொண்டிருந்தன.
காந்திஜியால் ஹரிஜன்கள் என அன்போடு அழைக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் குடும்பங்களோடு அங்கே குழுமியிருந்தனர்.
அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் அருகே கூடிக் கொண்டிருக்கும் போதே.. இந்த ஆலய நுழைவுப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமே எப்படி என அக்ரஹாரத்தில் கூடி ஆலோசித்தனர் பிராமணர்கள். ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தனர்.
நாமெல்லாம் போகலாம், கோவில் வாசல்ல நின்னுப்போம். அவா வந்தா அடிச்சு வெரட்டிடிலாம்- என இளம் பிராயத்து பிராமணர்கள் குதித்தனர்.
ஓர் நடுத்தர வயதுக்காரர் எழுந்து...’அபிஷ்டூ’ அவாமேல நம் கைபடாம வெரட்டணும்டா என ஆச்சாரமான யோசனையை ஆவேசமாக எடுத்துரைத்தார்.
கடைசியில் அக்கூட்டத்தில் வித்தியாசமான ஒரு முடிவெடுக்கப்பட்டது.
“இப்ப ஆம்பளைகள் நாம ரொம்பபேர் போகவேண்டாம். நம்மாத்து பொம்மனாட்டிகளை அனுப்புவோம். கோயிலுக்கு போறாமாதிரி இவா போகட்டும். அங்க... கோயிலுக்குள்ள போறதுக்காக போராடிண்டிருக்காளே... அவா பக்கத்துல போயி... அர்ச்சனைத் தட்டுல மறைச்சி எடுத்துண்டு போன மிளகாய்ப் பொடியை தூவிட்டு கூட்டத்தை கலைச்சிடணும்..
“இதுதான் முடிவு. இம்முடிவு ஒவ்வொரு ‘ஆத்து’க்கும் சென்று சொல்லப்பட்டது. அதேபோல் மடிசார் கட்டிக்கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட அக்ரஹார மாமிகள் கோயிலுக்கு அர்ச்சனை தட்டுகளோடு கிளம்பினார்கள்.
அவர்கள் தட்டில் இருந்தது சுத்தமான மிளகாய்ப் பொடி. ரங்கநாதன் சந்நிதியை நோக்கி கூட்டமாக போய்க்கொண்டே இருந்தவர்கள் திடீரென்று ‘ஹரிஜன்கள்’ பக்கம் சட்டென திரும்பி தாங்கள் கொண்டு வந்த மிளகாய்ப் பொடியை எல்லாம் விசிறி அடிக்க...ஒரே தும்மல் சத்தம் இருமல் சத்தம் பல ஹரிஜன்கள் அவசர அவசரமாய் பதறியபடி ஓடினார்கள்.
அவர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி விழுந்து கதறி அழுதபடி கலையப் பார்த்தார்கள்.
“கோயிலுக்குள் போய் சாமியை பாக்கணும்னு நெனச்சேன். இனி கண்ணே தெரியாது போலிருக்கே...” என அந்த நொடியிலும் சிலர் சொல்லியபடி ஓடினார்கள்
இப்போராட்டத்தை அறிந்து அங்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் இதைப் பார்த்துவிட்டு... ‘அந்த பொம்மனாட்டிகளை அப்புறப் படுத்தணும்ப்பா...’ என சொல்லிக்கொண்டே லத்திகளை ஓங்கிக் கொண்டுவர - சில ‘மிளகாய்ப்பொடி’ மாமிகளுக்கு போலீஸ் அடி விழுந்துவிட்டது. இதுதான் சிறீரங்கத்து சம்பவம்.
இதனை நான் சங்கராச்சாரியாரிடம் சொன்ன போது தான்... “அய்யய்யோ, அபச்சாரம், பொம்மனாட்டிகளை போலீஸ்காரா அடிச்சுட்டாளா... கஷ்டகாலமே” சட்டென அழுதுவிட்டார். அவர் அழுது, நான் அதுவரை பார்த்ததில்லை.இந்த சம்பவத்தை அவரிடத்திலே தெரியப்படுத்தியிருக்க வேண்டாமோ... என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்து அடங்கியது.
ஆனாலும்... இது போன்ற ஆலய நுழைவுப் போராட்டங்கள் மற்றும் சமய சம்பந்தம் உடைய காரியங்களைப் பற்றி தெரிந்துகொள்வதில் மகாபெரியவருக்கு ஓர் இஷ்டம். ஏனென்றால், சிருங்கேரி மடத்துக்காரர்கள் பல விஷயங்களில் சமய சம்ப்ரதாய விஷயங்களோடு சமுதாய விஷயங்களிலும் தலையிடுவார்கள்.
அவர்களுக்கு அவ்வப்போது பதில் தர மகாபெரியவரும் இதுபோன்ற சமுதாய விஷயங்களில் தலையிடுவது அவசியமாய் இருந்தது. இது ஒரு சிறிய காரணம் என்றாலும்... அனைத்து வர்க்க மக்களிடத்திலும் அவர் வைத்திருந்த அக்கறைதான் பெரிய காரணம்.
இந்த நிலைமையில் தான்... பண்டித ஜவஹர்லால் நேருஜியின் மந்திரி சபையில் ‘ஹிந்து கோடு பில்’ கொண்டு வருவதுபற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள்.
ஸ்மிருதியில் பெண்களுக்கு சொத்து பாத்யம் கிடையாது என கண்டிப்பாய் கூறப்பட்டிருக்கிறது
பாரத தேசத்துக்குள் பிராமணர்கள் வரும்போது அவர்களுடன் வந்த ஸ்திரீகள் மிகக் குறைவானவர்கள் என்பதை இக்கட்டுரைத் தொடரின் தொடக்க அத்யாயத்தில் நான் குறிப்பிட்டிருந்ததை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
இங்கு வந்த பிராமணர்கள் இங்குள்ள பெண்களோடு கூடி வாழ ஆரம்பித்தாலும்... பெண்களை சூத்ரர்களுக்கு சமமாகவே வைத்தனர். அதனால்தான் பெண்களுக்கு எவ்வித சமய சமஸ்காரங்களும், சடங்குகளும் கிடையாது. இதோடு கூட... பெண்களுக்கு வித்யா அதாவது கல்வி தேவையில்லை என்றும் ஸ்மிருதியில் விதித்தனர்
இதன் ஒரு பகுதியாகத்தான் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது என்றும்... அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டுமென்றும் ஸ்திரீகளுக்கு ஸ்மிருதி பயங்கர கட்டுப்பாடுகள் வைத்திருந்தது.
இந்த ஸ்மிருதியின் பிடியிலே பெண்கள் இருந்த சமயத்திலேதான்... நேருஜி அறிவித்தார். எல்லார்க்கும் சொத்துரிமை உண்டு. அதாவது பெண்களுக்கும்.
இவ்விஷயம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் எட்டியது. பெண்களை போலீசார் தாக்கியதற்காக கண்ணீர் விட்ட சங்கராச்சாரியார், பெண்களுக்கு சொத்து பாத்யம் உண்டு என கேட்டதும்.... - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்
பகுதி 27. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.
பகுதி 29. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!! ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.
No comments:
Post a Comment